வேலையில்லா பட்டதாரி விமர்சனம்

நடிகர் தனுஷின் தயாரிப்பு மற்றும் நடிப்பில் அனிருத்தின் அட்டகாசமான பாடல்களுடன் இன்று வெளியாகியிருக்கும் படம், வேலை இல்லாப்
பட்டதாரி. எஞ்சினியருக்குப் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் தனுஷிற்கு, ஒரு பெரும் போராட்டத்திற்குப் பின் ஒரு வேலை கிடைக்கிறது. அதையும் கெடுக்க ஒரு வில்லன் குறுக்கே வர, தனுஷ் எப்படி வெல்கிறார் என்பதே கதைன்னு வச்சுக்கலாம்! வீட்டில் தண்டச்சோறு என திட்டும் அப்பா, எப்போதும் ஆதரவளிக்கும் அம்மா, வேலைக்குப் போய் கார் வாங்கி வெறுப்பேற்றும் தம்பி, அடுத்த வீட்டு ஃபிகர் அமலா பால் என ரகளையான சூழலில் வாழ்கிறார் வி.ஐ.பி. தனுஷ். உண்மையில் இண்டர்வெல்வரை செம ரகளை.

இமேஜ், பஞ்ச் டயலாக் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சாதாரண இளைஞனாக, வீட்டில் இருக்கும் நாய்க்குச் சமமாக நடத்தப்பட்டாலும் அசராத டேக் இட் ஈஸி பார்ட்டியாக பட்டையைக் கிளப்புகிறார் தனுஷ். பட்டாசாக வெடிக்கும் வசனங்களும் சேர்ந்துகொள்ள, இடைவேளைவரை காமெடியில் பின்னிவிட்டார்கள்.

முதல் பத்து நிமிடத்தில் என்ன கதை நடந்ததோ, அதே தான் இடைவேளை வரை. கதை அங்கேயே டெக்ட் அடித்து உட்கார்ந்து கொண்டாலும், அப்பாவிடம் திட்டு வாங்குவது, ஓட்டை மோட்டார் சைக்கிளை வைத்துக்கொண்டே அமலா பாலை ரூட் விடுவது, இருவருக்கும் நடக்கும் ரகளையான முதல் சந்திப்பு என ரசிக்க வைக்கும் காட்சிகள்.

1980களில் வந்த படங்களில் வேலை இல்லாத் திண்டாட்டம் பற்றிய புலம்பல்கள் அதிகம் இருக்கும். மாணவர் சக்தி, புரட்சி போன்ற உட்டாலக்கடி விஷயங்களும் படம் முழுக்க தூவப்பட்டிருக்கும். தற்பொழுது டாஸ்மாக் ரேஞ்சிற்கு இஞ்சினியரிங் காலேஜையும் திறந்து, பி.ஈ டிகிரிக்கு உள்ள மதிப்பையே காலி செய்துவிட்டார்கள்.

இடைவேளைக்குப் பின் படம் அந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது. தனுஷின் அம்மா இறந்துவிட, அதன் காரணமாக தனுஷ்க்கு வேலை கிடைக்கிறது. ஒரு கவர்மெண்ட் புராஜக்ட்டுக்கு தலைமை இஞ்சினியராக தனுஷ் போக, அதை வில்லன் குரூப் கெடுக்கப் பார்க்கிறார்கள். அதை தனுஷ் மாணவர் சக்தி(VIPs) மற்றும் மக்கள் சக்தி துணையுடன் எப்படி வெல்கிறார் என்று யூகிக்க முடியும் திருப்பங்களுடன் இரண்டாம்பாதியில் காட்டுகிறார்கள்.

முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பும் குறும்பும் மிஸ்ஸிங் என்பதால், சீக்கிரம் கட்டடத்தை கட்டி முடிங்கப்பா எனும் மனநிலைக்கு நாம் வந்துவிடுவது தான் சிக்கல்!

ரொம்ப நாளைக்கு அப்புறம் பழைய, ரகளையான தனுஷைப் பார்க்க முடிகிறது. திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் செய்த அதே ஜாலியான ‘டோண்ட் கேர்’ கேரக்டர். இரண்டு மூன்று இடங்களில் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு ஸ்லோமோசனில் நடந்தாலும், தனுஷை ரசிக்க முடிகிறது. முதல்பாதியில் எவ்வளவு கேவலத்தையும் தாங்கும் காட்சிகளிலும், இரண்டாம்பாதியில் வில்லனுடன் பேசும் காட்சிகளிலும் கைதட்டல்களை அள்ளுகிறார்.

திருமதி.அமலா பால் கடைசிப்படம்(?) என்பதாலோ என்னவோ, டீசண்டாகவே காட்டியிருக்கிறார்கள். தனுஷ் கேரக்டரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக லவ் ஆவது அழகு. தனுஷ்க்குப் பொருத்தமான(!) ஜோடியாகத் தெரிகிறார். டூ லேட் தனுஷ்!

அப்பாவாக வரும் சமுத்திரக்கனி முதிர்ச்சியான நடிப்பு. ஒரு பாசமிக்க கண்டிப்பான தந்தையை கண்முன் கொண்டுவருகிறார். அம்மாவாக சரண்யா. அவங்க நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இடைவேளைக்குப் பின் விவேக் வந்தாலும், பெரிதாக காமெடி ஏதும் இல்லை. அவரும் இல்லையென்றால், பின்பாதியில் படம் ரொம்ப டல் ஆகியிருக்கும் என்பதும் உண்மை. வில்லனாக அறிமுகமாகியிருக்கும் அமிதாஷ், நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுகிறார். ’இவன் வேற மாதிரி’ஹீரோயின் சுரபி, இதில் சும்மா வந்துபோகிறார். 

நெகடிவ் :
- பெரிய திருப்பங்கள் இல்லாத இரண்டாம்பாதி
- தனுஷ்க்கும் அமலா பால்க்கும் இடையே லவ் வந்தபின், என்ன செய்வது என தெரியாமல் திரைக்கதை டீம் முழித்திருக்கிறார்கள். இடைவேளைக்குப் பின் சும்மா வந்துபோகிறார்.
- கட்டடம் கட்டுவது தான் குறிக்கோள் என்பது டிராமடிக்காக இல்லை
- அதில் ஏற்படும் பிரச்சினைகளும் தீர்வுகளும் குழந்தைகூட யூகித்துவிடும் பாஸ்.
- தனுஷின் கேரக்டரைசேசன் பிரமாதம். ஆனால் அதுமட்டுமே போதும் என்று நம்பியது தான் பலவீனம்!

 பாஸிடிவ் :
 -  தனுஷ்
-  செம காமெடியான முதல்பாதியும், வசனங்களும்
- இயக்குநர் வேல்ராஜின் ஒளிப்பதிவு
- அனிருத்தின் இசையில் துள்ளாட்டம் போட வைக்கும் பாடல்கள்
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget