கோடை வெயிலை சமாளிக்க வேண்டுமா

கோடை வந்தால் பள்ளிக் குழந்தைகளுக்குத் தவிர்த்து அனைவருக்கும் கஷ்டம் தான். அதிலும் சர்க்கரை நோயாளிகளின் பாடு கேட்கவே வேண்டாம், திண்டாடிப்
போவார்கள். எல்லாராலும் ஊட்டிக்கோ, கொடைக்கானலுக்கோ மூட்டைக்கட்ட முடியாது. அப்படியே போனாலும் ஒரு சில நாட்கள் கழித்து மறுபடியும் இங்கு வந்துதானே ஆக வேண்டும். ஆனால் முறையாக சில விஷயங்களை கடைபிடிக்கும் பட்சத்தில் கோடையை சாதாரண மக்கள் மட்டுமல்ல... சர்க்கரை நோயாளிகளும் அதிக சிரமமின்றி கடந்துவிடலாம்.
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் மூலம் அவர்களின் உடலில் நீர்ச்சத்துக் குறையும். இன்னும் வெயிலின் தாக்கத்தால் மேலும் உடலின் நீர்ச்சத்துக் குறையும். அதனால் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை சமநிலையுடன் வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் வெயிலின் தாக்கத்தை முதலில் தவிர்க்க வேண்டும். பிறகு உணவில் கவனம் செலுத்தவேண்டும்.
காலையில் நேரத்தோடு எழுந்து வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்துவிட்டால் வெயில் நேரத்தில் அனலில் வியர்த்து விறுவிறுக்க சமைக்க வேண்டியதில்லை.வெயில் காலத்தில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு போன்ற வண்ணங்களை தவிர்ப்பது நல்லது.
முடிந்தவரை வெளி வேலைகளை காலை அல்லது மாலை நேரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மதிய நேரத்தில் வெயிலில் அலைவதை தவிர்க்கவும். வெளியே செல்லும் போது, தொப்பி அல்லது குடைகளை பயன்படுத்துவது நல்லது. காலையில் எண்ணெய்ப் பலகாரங்கள் தவிர்த்து ஓட்ஸ், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இவை உடலுக்கு குளுமை சேர்க்கும். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். கீரை மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். மதிய உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. முளைகட்டிய நவதானியங்களை சாப்பிடலாம். நார்ச்சத்து அதிகமுள்ள, வாழைத்தண்டு, வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, கீரைத் தண்டு போன்றவற்றை கூட்டு, பொரியலாக தினமும் மதிய உணவுடன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வெயில் காலத்தில் மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவுகளை சர்க்கரை நோயாளிகள் குறைததுக் கொள்வது நல்லது. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் அறவே வேண்டாம். இடையில் பசிக்கும் நேரத்திலோ, களைப்பாக உள்ளபோதோ குளிர்பானங்களை அறவே தவிர்த்து மோர் அருந்தலாம். மதிய வேளையில் மோரில் நன்கு நீர் கலந்து அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிப்பது நல்லது. அதிகளவு நீர் அருந்துவது நல்லது. ஒரேடியாக அதிகமாக அருந்தாமல் இடைவெளிவிட்டு அடிக்கடி அருந்துவது நல்லது.
ஐஸ் வாட்டர் தவிர்த்து மண்பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது. அல்லது சாதாரண நீரே போதுமானது. சர்க்கரை நோயாளிகள் கரும்புச்சாறு, ஐஸ்கிரீம் இவற்றை தவிர்ப்பது நல்லது.சர்க்கரை நோயாளிகள் அதிக இனிப்புள்ள பழங்களை தவிர்த்து ஆப்பிள், பப்பாளி, நாவல்பழம், அத்திப்பழம், போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். அல்லது சர்க்கரையைத் தவிர்த்து ஜூஸ் செய்து அருந்தலாம். இளநீர், பனை நுங்கு உடல் வெப்பத்தைத் தடுத்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும்.
தினமும் இருமுறை குளிப்பது நல்லது. வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வெயில் காலத்தில் தோல் வறண்டு காணப்படும். அதனால் எண்ணெய் தடவிக்கொள்வது நல்லது. மருத்துவரிடம் ஆலோசிக்காமல் எந்த கிரீமும் உபயோகிக்க வேண்டும். வெயில் காலத்திலும் தங்கள் நடைபயிற்சியை கைவிடவேண்டாம். அதே சமயம் காலை வெயில் வரும் முன்போ, மாலை நேரத்தில் மரங்கள் நிறைந்த குளிர்ச்சியான பகுதியிலோ நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
கோடைகாலம் வந்தாலே வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் சகஜம். அதை பல நேரங்களில் தவிர்க்க முடியாது. அதனால் எப்போதும் தங்கள் கைவசம் சர்க்கரை வியாதிக்கான மாத்திரைகளை எடுத்துச்செல்வது நலம். சர்க்கரை நோயாளிகளே! மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றுங்க. கோடை காலத்தையும் என்ஜாய் பண்ணுங்க.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget