இன்னார்க்கு இன்னாரென்று விமர்சனம்

நடிகர் : காந்தி சிலம்பரசன்
நடிகை : அஞ்சனா சுஹானி
இயக்குனர் : ஆண்டாள் ரமேஷ்
இசை : வசந்தமணி
ஓளிப்பதிவு : சாய் நடராஜ்


தன் தந்தையோடு கிராமத்தில் சிறு ஹோட்டல் நடத்தி வருகிறார் நாயகன் கணேஷ் (சிலம்பரசன்). அதே ஊரில் தன் முறைப்பெண்ணான பண்ணையாரின் மகள் ஜானகியை (அஞ்சனா) சிறு வயதிலிருந்தே காதலித்து வருகிறார். ஜானகியும் அவரை காதலித்து வருகிறார். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் கணேசின் அப்பாவிற்கு தெரிந்து விடுகிறது. இவர்களை பிரித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தன் உறவுக்காரரான பண்ணையாரிடம் சென்று இந்த விஷயத்தை கூறுகிறார். இதற்கு பண்ணையார் கோபம் அடைந்து இந்த விஷயத்தை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி கணேசின் அப்பாவை திட்டி விடுகிறார்.

பிறகு கோபத்துடன் வீட்டிற்கு செல்லும் பண்ணையார் தன் மகளான ஜானகியை கண்டிக்கிறார். தன் மூத்த மகனை அழைத்து கணேசை கொன்றுவிடுமாறு கூறுகிறார். இதைக்கேட்ட பண்ணையாரின் மகன், கணேஷ் வீட்டிற்கு செல்கிறார். அங்கு கணேஷ் இல்லாததால் அவரின் அப்பாவை அடித்து விடுகிறார். மயக்கத்தில் கீழே விழும் அவர் இறந்து விடுகிறார்.

அதன்பிறகு வீட்டிற்கு வரும் கணேஷ், தந்தை இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். பிறகு பண்ணையாரிடம் நியாயத்தை கேட்க செல்கிறார். அங்கு பண்ணையார் தன் மகளை திருமணம் செய்ய வேண்டுமென்றால் 30 நாட்களில் 1 கோடி ரூபாய் எடுத்துவந்தால் மட்டுமே என் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக சவால் விடுகிறார். இதைக் கேட்ட கணேஷ், ஜானகியை கைபிடிக்கும் நோக்கத்தில் இந்த சவாலை ஏற்று சென்னைக்கு செல்கிறார்.

சென்னையில் தன் சித்தப்பா வைத்திருக்கும் ஹோட்டலில் சமையல்காரராக வேலைக்குச் சேர்கிறார் கணேஷ். இதே ஊரில் ஓட்டல் நடத்தி நஷ்டம் அடைந்திருக்கும் மற்றொரு ஹோட்டல் முதலாளியின் மகளான கவிதா அந்த ஹோட்டலுக்கு வருகிறார். அங்கு உணவு சாப்பிடும் கவிதா (ஸ்டெபி), தன் ஹோட்டலில் உள்ள சுவை போன்று உணவு இருப்பதால் கணேசை வைத்து ஹோட்டல் நடத்த முடிவு செய்து தன் தந்தையிடம் சென்று ஆலோசனையும் கூறுகிறார். இதை ஏற்ற கவிதாவின் தந்தை ஹோட்டல் நடத்த முடிவு செய்கிறார். இதற்கிடையில் கவிதா, கணேசை காதலிக்க ஆரம்பிக்கிறார். 

இறுதியில் கணேஷ் ஒரு கோடி ரூபாய் சம்பாதித்து ஜானகியை மணந்தாரா? இல்லை கவிதாவை மணந்தாரா? என்பதை பல திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

அறிமுக நாயகன் சிலம்பரசன் முதல் படம் என்பதால் முடிந்தவரை கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். இருந்தாலும் திரையில் பார்க்கும்போது பல காட்சிகளில் இவர் பேசும் வசனங்கள் நடிப்போடு ஒன்றவில்லை. பண்ணையாரின் மகளாக வரும் நாயகி அஞ்சனா, கிராமத்து பெண் வேடத்தில் அழகாக பொருந்துகிறார். சிறு வயதான இவரை விதவை கோலத்தில் பார்க்க முடியவில்லை. மற்றபடி, பார்க்க அழகாக இருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் ஸ்டெபி கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். 

பண்ணையாராக வரும் சந்தானபாரதி வில்லனாக மிரட்டுகிறார். நாயகனுக்கு சித்தப்பாவாக வரும் அனுமோகன் பிற்பாதியில் கதையை நகர்த்த உதவியிருக்கிறார். இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் பல காட்சிகளை பிற படங்களிலிருந்து உருவியது அப்பட்டமாக தெரிகிறது. படத்தில் இவர் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். வசந்தமணி இசையில் பாடல்கள் பரவாயில்லை. சாய் நடராஜ் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச்சிடுகிறது. 

மொத்தத்தில் ‘இன்னார்க்கு இன்னாரென்று’ பழைய கதை.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget