அழகிய பாண்டிபுரம் சினிமா விமர்சனம்

நடிகர் : இளங்கோ
நடிகை : அஞ்சனா
இயக்குனர் : ராயன்.ந
இசை : பரத்வாஜ்
ஓளிப்பதிவு : அகிலன்


தேனி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் நாயகன் இளங்கோ, தனது அப்பா மனோபாலா, அம்மா பாத்திமா பாபு, அண்ணன் ஸ்ரீமன், அண்ணி யுவராணி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். 

இவர்களுக்கு எதிர் வீட்டில் நாயகி அஞ்சனாவின் குடும்பம் வசித்து வருகிறது. இவர்கள் இருவரது குடும்பத்துக்கும் காலங்காலமாக பகை இருந்து வருகிறது. 

தங்களுக்கு எதிரியான குடும்பத்தில் வயசுப் பையன் இருப்பதால், நாயகியை ஊட்டியில் உள்ள கல்லூரியில் தங்கி படிக்க வைக்கிறார்கள் அவளது பெற்றோர். அங்கேயே தங்கி படித்து முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்புகிறாள் நாயகி. 

தன்னுடைய மகளை எதிர்வீட்டில் இருப்பவர்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக பொத்தி பொத்தி வளர்த்து வருகிறார்கள். இப்படியே எத்தனை நாளைக்கு வைத்திருப்பது என்று முடிவு செய்த நாயகியின் பெற்றோர், நாயகிக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கின்றனர். அதற்காக மாப்பிள்ளை தேடும் படலம் நடத்துகின்றனர். 

இதையறிந்த நாயகனின் அப்பா மனோபாலா தானும் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். நாயகியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையை கலாட்டா செய்து விரட்டி விடுகிறார் நாயகன். இதனால் நாயகனை பார்க்க வரும் பெண் வீட்டாரை கலாட்டா செய்து விரட்டி விடுகிறாள் நாயகி. 

இப்படியாக இவர்களது பகை தொடர்ந்து வருகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. காலங்காலமாக இருவீட்டாரிடமும் இருந்து வரும் பகையையும் மீறி இருவரும் காதலித்து வருகிறார்கள். 

இறுதியில், இவர்கள் காதலிக்கும் விஷயம் அவர்களது வீட்டுக்கு தெரிந்ததா? இருவருடைய வீட்டிலும் இவர்களது காதலை ஏற்று, பகையை முறித்துக் கொண்டார்களா? என்பதே மீதிக்கதை. 

நாயகன் இளங்கோவுக்கு நாயகனுக்குண்டான தோற்றம் இல்லையென்றாலும் நடிப்பில் ஒரளவு தேறியிருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து கலாட்டா செய்யும் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் தான் நடிப்பு வரவில்லை. 

நாயகி அஞ்சனா, நாயகிக்குண்டான அழகுடன் பளிச்சிடுகிறார். நடிப்பிலும் முழு சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். கிராமத்து பெண் வேடத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். 

எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஸ்ரீமன், பஞ்சு சுப்பு, தேவதர்ஷினி, யுவரானி, பாத்திமா பாபு, மீரா கிருஷ்ணன், முத்துக்காளை என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பில் கவர்கிறார்கள். 

இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்துக் கொண்டு ஒரு முழு நேர காமெடி படத்தை கொடுக்க தவறியிருக்கிறார் இயக்குனர் ராயன். படத்தில் எந்த இடத்திலும் நகைச்சுவை என்ற பேச்சுக்கே இடமே இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார். 

காலங்காலமாக இரு குடும்பத்திற்குள் இருக்கும் பகைக்கு பாயாசம் தான் காரணம் என்று சப்பைக் கட்டு கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது தான் நகைச்சுவையாக தெரிகிறது. பரத்வாஜின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையும் பிரமாதம். அகிலன் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அழகாக படமாக்கியிருக்கிறது. 

மொத்தத்தில் அழகிய பாண்டிபுரம் அழகு குறைவுதான்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget