நிர்வாகத்தில் அசத்தும் பெண்கள்

குடும்பத்தின் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெண்களும் பங்கேற்கும்போதுதான் அந்தக் குடும்ப பொருளாதார நிலைமை, வளமையை
நோக்கிப் பயணிக்கத் தொடங்கும். இயல்பாகவே பெண்களுக்கு நிதி நிர்வாகத்தில் நல்ல திறன் உண்டு என்பதை பல ஆண்கள் உணர்வதில்லை. 

குடும்பத்துக்கான வரவு-செலவுகளை மேற்கொள்வதில் பெண்கள் புத்திசாலிகள் என்பதே உண்மை. வருமானம் குறைவாக உள்ள பல குடும்பங்களை இல்லத்தரசிகள் தங்கள் திறமையால் செம்மையாக நடத்திச்செல்வதை கண்கூடாகக் காண முடியும். குடும்பச் செலவைக் குறைப்பதோடு, சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து, வீட்டுச் செலவுக்கு திடீரென பணம் தேவைப்படும்போது தந்து உதவி ஆச்சரியப்பட வைக்கும் பெண்கள் அநேகம். 

தற்போது வாழ்க்கை எவ்வளவோ மாறிவிட்டது. வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. வருமானம் உயர்ந்திருப்பதால், செலவு செய்யும் மனப்பாங்கும் அதிகரித்திருக்கிறது. சம்பாதிக்கும் பெண்களுக்கு, ஓரளவு செலவு செய்தால் பரவாயில்லை என்ற மனோபாவம் ஏற்பட்டிருப்பது உண்மை. 

அது ஆக்கபூர்வமானதாக இருந்தால் குடும்பத்துக்கு உதவும். இன்றைக்கும் பல வீடுகளில் பெண்கள் பட்ஜெட் போட்டுச் செலவு செய்கிறார்கள். ஆனால் அவற்றிலும் கூட, தவிர்க்கக் கூடிய செலவுகள் எது என்று அவர்களே பரிசோதித்து சிலவற்றைக் கழிக்கலாம், சிறிய சேமிப்புத் திட்டங்கள், முதலீட்டுத் திட்டங்களில் ஆர்வம் காட்டலாம்.

இதில் கணவரின் ஆலோசனையையும், உதவியையும் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. சம்பாதிக்கும் பெண்கள் பலரும் கூட காப்பீட்டு பாலிசிகளின் அவசியத்தை உணரவில்லை. ஒவ்வொரு குடும்பமும் முதலில் ஒட்டுமொத்த குடும்பத்துக்கு ஒரு மருத்துவ காப்பீட்டு பாலிசியையும், குடும்பத் தலைவர் பேரில் ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் பாலிசியையும் கட்டாயம் எடுத்தாகவேண்டும். 

இதற்கான பணத்தை மாதா மாதம் ஒதுக்கி வைத்துவிடுவது அவசியம். வேலை நிரந்தரம் என்பது தற்போது அரிதாகி வருகிறது. வேலை இழப்பு அல்லது எதிர்பாராத திடீர் செலவு போன்றவற்றைச் சமாளிக்க ஓர் அவசரகால நிதி கட்டாயம் இருக்கவேண்டும். 

குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை அல்லது ஆறு மாத காலத்துக்கு குடும்பத்தை நடத்தத் தேவையான பணத்தைச் சேர்க்க மாதா மாதம் கொஞ்சம் ஒதுக்கிவிடுவது அவசியம். அடுத்து, குடும்பத்தின் எதிர்காலத் தேவைகளை சரியாகக் கணித்து, அதற்கான முதலீட்டை உடனே தொடங்குவது நல்லது. 

சொந்த வீடு, குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணம், ஓய்வுக்   காலத்துக்கு தேவையான பணத்தைச் சேர்ப்பது உள்பட நமது எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சரியான வழிகளில் முதலீடு செய்யவேண்டும். குடும்பச் செலவை சரியாகச் செய்யும் பெண்கள், முதலீடு என்று வரும்போது அதுகுறித்து அலட்டிக்கொள்வதில்லை. 

அல்லது தமக்குத் தெரிந்தவர், உறவினர் கூறினார் என்று தங்களுக்குப் பொருத்தமில்லாத, 'ரிஸ்க்' அதிகமான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்துவிடுகிறார்கள். பெண்கள் தாங்கள் பாடுபட்டுச் சம்பாதித்த பணத்தை அல்லது கணவரின் வருமானத்தை எப்படி கவனமாகச் செலவு செய்கிறார்களோ, அதே கவனத்தை முதலீடு போன்ற விஷயங்களிலும் காட்ட வேண்டும். 

இதுதொடர்பாக சரியாக வழிகாட்டுவதற்கு இன்று பல நிதி ஆலோசகர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, குடும்ப வரவு-செலவு விஷயத்தில் கணவன், மனைவி இருவரும் கலந்து பேசித்தான் முடிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், குழப்பம், வீண் விரயம், முட்டல்-மோதல் தான் மிஞ்சும்!
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget