பெண்மையின் பெருமை

மங்கையராய் பிறப்பதற்கே–நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா

–மகாகவி பாரதி.


தமிழர்கள் இன்று நேற்று அல்ல, காலம் காலமாக பெண்களைப் பெருமைப்படுத்தி வருகிறார்கள். கல்வி, செல்வம், வீரம் என்று மனிதனின் மாண்புக்கு தேவையான மூன்றையும் வழங்கும் கடவுள்களையும் பெண்களாகவே உருவகப்படுத்தி இருக்கிறார்கள். இயல்பு வாழ்க்கையிலும் தாய், தந்தை, ஆசான் என்று பெண்ணுக்கே முதல் இடம்.

மனிதனை வாழ வைக்கும் நதிகளை நமது நாடு தாயாக போற்றி வழிபடுகிறது. ஏன் உலகமே அவரவர் நாட்டை தாய்நாடு என்றுதான் அழைக்கிறது. இந்த அளவு பெண்கள் பெருமைப்படுத்தப்பட்டாலும் எந்த நாட்டுக்கும் இல்லாத உயர்ந்த பாரம்பரியமும் காலாசாரமும் நமது நாட்டுப் பெண்களுக்குத்தான் இருக்கிறது. இது உலக அரங்கிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று.

ஆணும் – பெண்ணும் சமமாகத்தான் படைக்கப்பட்டார்கள் என்று எல்லா மதமும் சொல்கிறது. என்றாலும் காலப் போக்கில் ஆண் ஆதிக்கம் தலை தூக்கியது. இயற்கை சூழல் மற்றும் உடல் அமைப்பு, வளர்க்கப்பட்ட விதம், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அவர்களை 2–ம் இடத்துக்கு கொண்டு வந்தது. ஆண்தான் எல்லாம் என்று உருவாக்கப்பட்ட மனோபாவம் ஆணைச் சார்ந்துதான் பெண் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது. அதையும் மீறி சரித்திரம் படைத்த, சாதனை நிகழ்த்திய பெண்கள் ஏராளம்.

வெளியே தலைகாட்டக் கூடாது என்ற காலத்திலேயே ஆட்சி செய்த அரசிகள், அரசவையை அலங்கரித்த புலவர்கள், உரிமைகளை போராடி மீட்டுக்கொடுத்த, அறிவியலில், கணிதத்தில் கரைகண்ட பெண்கள் பலர். கலைத்துறையில் கொடி கட்டிப் பறந்தவர்கள் ஏராளம். இத்தனையும் நடந்த பிறகும் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று சொல்ல பல நூற்றாண்டுகளை கடந்து வர வேண்டியிருந்தது.

இன்று ஆணும் பெண்ணும் சமம் என்று ஆயிரம்தான் சொல்லிக் கொண்டாலும் நமது நாட்டில் இந்த இலக்கு இன்னும் முழுமையாக எட்டப்படவில்லை என்பது சொல்லாமலேயே தெரியும் உண்மை. இத்தனை பொதுத்தேர்தல்களை சந்தித்த பிறகும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

ஒரு சில கட்சிகளில் பெண்களுக்கு கட்சிப் பதவிகளில் ஓரளவு இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் தேர்தல் என்று வரும்போது அதற்கும் இடமில்லாமல் போய் விடுகிறது. உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. என்றாலும் அந்த பெண்களின் கணவர்கள்தான் மனைவியின் பதவியை மறைமுகமாக அனுபவிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் கூடவே இருக்கிறது.

இப்போது இந்தியாவின் இந்திய ஆட்சிப் பணியில் பெண்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அரசு பதவிகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறார்கள். போலீசையும், ராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை. சாதாரண விமானங்களை மட்டுமல்ல, ராணுவத்தில் உள்ள குண்டு வீசும் விமானங்களையும் இயக்குகிறார்கள்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் திட்டப் பிரிவில் அதிக எண்ணிக்கையில் பெண்கள்தான் பணி புரிகிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை. செயற்கை கோள், எரிபொருள் பிரிவு என்று பெண்கள் பெருமளவில் பணிபுரிந்து நமது நாட்டு விண்வெளி அமைப்புக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.

இந்திய அரசியல் தலைமைப் பொறுப்பிலும் சாதித்தவர்கள், சாதிப்பவர்கள் வரிசையில் பெண்கள் முக்கிய இடம் பிடித்திருக்கிறார்கள். சரித்திரத்தை மாற்றும் சக்தியும் படைத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் மேலே இந்திய பெண்களுக்கு உலக அளவில் பெரும் மரியாதை இருக்கிறது. என்றாலும் மேலை நாட்டு கலாசாரம் புகுந்ததால் ஒருசில தடுமாற்றங்கள் எழுந்துள்ளதையும் மறுக்க முடியாது. ஒருசில நாடுகளை ஒப்பிட்டால் பெண்களுக்கு நம்நாட்டில் அதிக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒருசிலர் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு எல்லையை தாண்டும்போது சிக்கல் வந்து விடுகிறது. பெண்களை மதிப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். பெண் சிசுவை வெறுக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.

கிடைத்த வாய்ப்பை தவறாக பயன்படுத்தி சுதந்திரம் என்ற பெயரில் லட்சுமண கோட்டை தாண்டும்போதுதான் விபரீதங்கள் ஏற்படுகிறது. முடிவு... சேலை மேல் முள் விழுந்தாலும் முள்ளின் மீது சேலை விழுந்தாலும் பாதிப்பு சேலைக்குதான்... இல்லை சுடிதாருக்குத்தான் என்ற நிலை உருவாகி விடுகிறது. தவறு செய்தவர்கள் அதை நியாயப்படுத்தும் அளவுக்கு காலம் மாறிக்கிடக்கிறது. அதற்கு ஏற்ப பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் வந்திருக்கிறது.

அனைத்து துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு சமம் என்பதை நிரூபித்து விட்டார்கள். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கூட பெண்கள் எண்ணிக்கைதான் அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய வளர்ச்சியில் தொழில்நுட்ப முன்னேற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுபோல் பருவவயதினரை தடம்புரள வைப்பதற்கு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்–அப் என்று பல தகவல் தொலை தொடர்புகள் வம்பை விலை கொடுத்து வாங்க காரணமாகி விடுகின்றன.

இருவரும் சமம் என்கிற நிலையை கடந்து, எதுவும் தவறில்லை என்றபோக்கு ஆண்–பெண் இருவரிடமும் வளரும் போது, பெண்களை மதிக்க வேண்டும் என்ற மனநிலை மாறிவிடுகிறது. அதன் பாதிப்பு முழுவதும் பெண்களுக்குத்தான் என்பதில் போய் முடிகிறது.

சமீபகாலமாக இந்த பிரச்சினை இளம் பெண்களுக்கு மட்டுமல்ல குடும்பப் பெண்களையும், துறவறம் பூண்டவர்களையும் கூட ஆட்டிப்படைக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். முதலில் நமது கலாசாரத்துக்கு, நம்நாட்டு பெண்களுக்கு இருக்கும் பெருமை காப்பாற்றப்பட வேண்டும். அது போன்ற மனப்பான்மையை இருபாலாரும் வளர்க்க வேண்டியது அவசியம்.

சுயகட்டுப்பாடு இருந்தாலும் வரம்பு மீறுபவர்களை கடுமையாக கட்டுப்படுத்தி, மீண்டும் அதுபோன்ற விபரீதங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல, சம்பந்தப்படலாமா என்று நினைப்பவர்கள் கூட மனம்மாறும் அளவுக்கு உறுதியான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அதற்கான கொள்கைகளை வகுத்து முறைப்படி செயல்படுத்த வேண்டும் என்பதே பெண்கள் நலம் காக்க விரும்புவோரின் விருப்பம். தாய் இல்லாமல் யாரும் இல்லை. அந்த பெருமையைப் பெற்ற பெண்மையை போற்றுவோம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget