சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை பற்றி தெரியுமா

கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை. நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவி பிரம்மனின் துணைவியாக இருப்பவள் . 

சரஸ்வதி பூஜைக்கு முதல் நாளே குழந்தைகளின் பாடப்புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை ஒரு பலகையில் அடுக்கி மஞ்சள் துணியால் பாதி மூடியபடி போர்த்திவிட வேண்டும். 

வீடு, அலுவலகம், தொழில்நிலையம் ஆகியவற்றின் முகப்பில் வாழைக்கன்றுகள், மாவிலைகள், தென்னங்குருத்துத் தோரணங்கள் கட்டலாம். ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபட வேண்டும். (விக்கிரகம் என்றால் அதற்கு அபிஷேகம் செய்துகொள்ள வேண்டியது முக்கியம்). 

சரஸ்வதி பூஜையன்று காலையில் சரஸ்வதி படத்தை அலங்கரித்து, 3 விளக்குகளை அருகே வைத்து வழக்கமான பூஜை முறைகளை செய்ய வேண்டும். சரஸ்வதி தேவிக்கு வெண்ணெய், பால், தயிர், பாகுவெல்லம், தேன், மோதகம், வடை, கதம்ப சாதம் ஆகியவற்றில் ஒன்றை தயார் செய்து படைப்பது நல்லது. செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரை மலர்கள் அன்னைக்கு உகந்த மலர்களாகும். இவற்றால் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், அவள் உறைந்திருக்கும் புத்தகங்களுக்கும் அணிவித்தல் வேண்டும் . வாழை இலையில் பொரி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை வைக்க வேண்டும். . 

எதற்கும் விநாயகரே முதலானவர். எனவே மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். பூஜையில் கலசம் வைத்தும் கலைவாணியை வணங்கலாம். கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிப்பதால் கூடுதல் நலன் கிடைக்கும். பூஜையின்போது வீட்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரும் கலைவாணிக்குரிய பாடல்களைப் பாடி வணங்கலாம். நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள்பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் போதும். அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பெரியவர்களிடம் குழந்தைகள் ஆசீர்வாதம் பெறுவது மிகவும் சிறப்பானது. சரஸ்வதி பூஜையை குடும்பத்துடன் பயபக்தியுடன் மேற்கொண்டால் சகல கல்வி பாக்கியமும் உங்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.

சரஸ்வதி பூஜையின்போது "துர்க்கா லட்சுமி சரஸ் வதீப்யோ நம" என்று கூறி பூஜையை ஆரம்பிப்பது நன்று

கலை மகளான சரஸ்வதியை வழிபடும் தினமான சரஸ்வதி பூஜையன்று மாலை கொண்டாடப்படும் விழாவே ஆயுதபூஜை.

செய்யும்தொழிலே தெய்வம் என்ற புனித தத்துவத்தை உணர்த்தும் இந்த ஆயுதபூஜை நம் நாட்டில் மதவேறுபாடின்றி எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம்செய்யும் தொழிலுக்கு உதவக்கூடிய ஆயுதங்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவே ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை . அன்றைய தினம் சிறிய மற்றும் பெரிய தொழில் இயந்திரங்கள் முதல் எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்து , பிறகு தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

ஜீவனத்துக்கு ஆதாரமான எந்தப் பொருட்களையும் படையலில் வைத்து ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபடலாம். பூஜை முடியும் போது ஆயுதங்களுக்கும் இயந்திரங்களுக்கும் எலுமிச்சம் பழங்களைச் சுற்றி அறுத்துக் குங்குமம் தடவிப் பிழிந்து கற்பூரம் ஏற்றப்பட்ட தேங்காயையும் குங்குமம் திணிக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காயையும் சுற்றி வாயிலில் போட்டு உடைப்பது போன்ற திருஷ்டிக் கழிப்புகளையும் தவறாமல் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய உகந்த நேரம் காலை 11.00 - 11.59
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget