திருமணமா த்ரிஷாவின் திரில் பேட்டி

தமிழ் சினிமாவில் ஒரு அழகான ஆச்சரியம். ஓரிரு படங்களுடன், மார்க்கெட் இழந்து, மூட்டை முடிச்சுகளுடன் ஓடும் ஹீரோயின்களுக்கு
மத்தியில், 12 ஆண்டுகளாக, சினிமா ரசிகர்களின் டார்லிங்காக வலம் வரும் மூன்றெழுத்து ஹைக்கூ. சமீபகாலமாக, திருமணம் தொடர்பாக தொடர்ந்து துரத்தும் கிசு கிசுவால் வாடிப்போயிருக்கிறார். இது தொடர்பாக, நம்முடன் அவர் பேசியதிலிருந்து...

ஹீரோயினாக, 12 ஆண்டுகள் தொடர்ந்து தாக்குப்பிடிப்பது எப்படி சாத்தியம்?

கடவுள் புண்ணியம் தான் அதற்கு காரணம். சரியான படங்களை தேர்வு செய்தது, நம்முடைய நடவடிக்கைகள், அப்புறம் கொஞ்சம் அதிர்ஷ்டம் இதெல்லாமும் ஒரு காரணம். என்ன தான் சிரமப்பட்டு நடித்தாலும், திறமை இருந்தாலும், படம் ஜெயிக்கணும்; பெரிய நடிகர்கள், பெரிய பேனர்களில் நடிக்கணும். பணத்துக்கு ஆசைப்பட்டு, தவறான படத்தில் நடித்தால், காலியாகி விடுவோம்.

த்ரிஷா எப்படிப்பட்ட பொண்ணு?

எந்த ஒரு விஷயத்தையுமே, தைரியமாக எதிர்கொள்ளும் மனப் பக்குவம் உள்ள பொண்ணு நான். எங்க வீட்டில், அம்மா, பாட்டி எல்லாருமே தைரியமானவங்க தான். எதற்காகவும், அழுது புலம்புவது இல்லை. என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் எழுதலாம்; ஆனால், அதற்கு ஒரு லிமிட் வேண்டும் அல்லவா? லிமிட் தாண்டினால் கண்டிப்பாக கோபம் வரும்.

சினிமா வேண்டாம் என, எப்போதாவது நினைத்தது உண்டா?

ஒரு நாளும் இல்லை. நானே விரும்பி வந்த தொழில் இது. நேரத்துக்கு துாங்க முடியாது; சாப்பிட முடியாது; எந்த ஒரு விழாவுக்கும் போக முடியாது. ஆனாலும், எத்தனை கஷ்டம் வந்தாலும், சினிமாவை விட்டு போக வேண்டும் என்ற எண்ணம் வந்தது இல்லை.

எப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க ஆசை?

வில்லியாக நடிக்க வேண்டும். அதேபோல், மகாராணியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. வரலாற்றை பின்னணியாக கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன். அப்புறம், பார்வை திறனற்ற பெண் வேடத்திலும் நடிக்க ஆசை உள்ளது.

அஜித் கூட, 4 படங்களில் நடித்துள்ளது பற்றி...

அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர், வெளிப்படையாக பேசும் மனிதர். பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது, அவருக்கு நன்றாக தெரியும். யாராக இருந்தாலும் மரியாதையுடன் பழகுவார். முகத்துக்கு நேரில் ஒன்று, மறைமுகமாக ஒன்று என, பேசமாட்டார். அவருடன் நடிக்க தொடர்ந்து வாய்ப்பு கிடைத்ததை பெருமையாகவே நினைக்கிறேன்.

நடிகைகளின் திருமணம் மட்டும் ஏன் சர்ச்சைக்குரியதாகவே இருக்கு?

இப்பத்தான், பாயின்டுக்கு வர்றீங்கனு நினைக்கிறேன். இதற்கான பதிலைத் தானே அனைவரும் எதிர்பார்க்கிறீர்கள். நடிகைகள் மீது உள்ள புகழ் வெளிச்சம் தான் இதற்கு காரணம். நடிகைககளாக இல்லாதவர்களும், காதலிக்கின்றனர்; கல்யாணம் செய்கின்றனர். அதில் சர்ச்சையும் ஏற்படுகிறது. ஆனால், அது, அதிகமாக வெளியில் தெரிவது இல்லை. நடிகைகள் கல்யாண விஷயம் என்றால், ஓவரா, பில்டப் கொடுத்துடறாங்க. ஒருத்தரை பார்த்ததுமே, முதல் பார்வையிலேயே அவரை கல்யாணம் செய்து விட முடியாது. அவரின் பின்னணி, அவரின் குணம் என, அனைத்து விஷயங்களும் தெரிய வேண்டும். சாதாரண பெண்கள் மட்டுமல்லாமல், நடிகைகளும் இதைத் தான் எதிர்பார்க்கின்றனர். ஆனால், நடிகைகள் கல்யாணம் மட்டும், விளம்பர பொருளாகி விடுவது தான், வேதனையான விஷயம்.

சரி அதை விடுங்க; எப்போது தான் கல்யாணம் செய்ய உத்தேசம்?

இரண்டு வருஷமாகவே அம்மா வற்புறுத்திட்டு இருக்காங்க. நானும், நல்ல பையனா பாருங்க, கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டேன். சினிமா வாய்ப்பு போய்விடும் என்ற கவலை எதுவும் இல்லை; நிறைய படம் பண்ணியாச்சு. என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். ஆனால், என்னை ஒரு வார்த்தை கேட்டு விட்டு எழுதலாமே. எல்லார் வீட்டிலும் மகளுக்கு கல்யாண ஏற்பாடுகளை செய்வது மாதிரி தான், எனக்கும் செய்யுறாங்க. இதை ஏன் பெரிது படுத்துகின்றனர் என, தெரியவில்லை.

கடைசியா ஒரு கேள்வி; யார் அந்த வருண்...?

என் நட்பு வட்டாரத்தில் நிறைய பேர் உள்ளனர். எல்லாரிடமும் எளிதாக பழகி விடுவேன். ஆனாலும், வருண் பற்றி பேசுவதற்கு எனக்கு அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், இப்போது அதைப் பற்றி பேச வேண்டாமே. எனக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கும்போது, கண்டிப்பாக, எல்லாருக்கும் அதை வெளிப்படையாக தெரிவிப்பேன்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget