ஏ.டி.எம் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிப்பது எப்படி

நீங்கள் அடிக்கடி ஏ.டி.எம். செல்லக்கூடியவராக இருந்தால், இனி அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏ.டி.எம். எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா மையங்களில் பணம் எடுப்பதற்கு கடிவாளம் போடத் தொடங்கிவிட்டது ரிசர்வ் வங்கி. 

நீங்கள் உங்களின் கணக்கு உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் மாதம் 5 முறையும், மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மாதம் 3 முறையும் மட்டுமே கட்டணமின்றிப் பணம் எடுக்க முடியும். 

அதற்குப் பிந்தைய பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூ. 20 செலுத்த வேண்டும். ஆரம்பகட்டமாக சென்னை போன்ற பெருநகரங்களில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த வழக்கம், பின்னர் மற்ற நகரங்களுக்கும் வரும் என்று கூறப்படுகிறது. சரி, இந்த ஏ.டி.எம். கட்டுப்பாட்டில் இருந்து தப்பிப்பது எப்படி? இதோ சில யோசனைகள்... 

• சில வங்கிகள், குறிப்பாக சில தனியார் வங்கிகள் வட்டாரத்தில், தங்கள் வாடிக்கையாளர்கள் 5 முறை மட்டும்தான் கட்டணமின்றிப் பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, ஏ.டி.எம். விஷயத்தில் உங்களின் சொந்த வங்கியின் நிலை என்னவென்று அறிந்துகொள்ளுங்கள். அளவை அதிகரித்துக்கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் டெபிட் கார்டை பயன்படுத்தி ஒருமுறைக்கு ரூ. 10 ஆயிரம் மட்டும்தான் எடுக்க முடியும் என்றால், நீங்கள் உங்கள் வங்கியில் எழுதிக் கொடுத்து, ஒருமுறை பணம் எடுக்கும் அளவை அதிகரித்துக்கொள்ளலாம். 

• பெருநகரங்களில் வசிப்பவர்கள் தங்கள் மாதாந்திர அளவான ஐந்து முறையைத் தாண்டிவிட்டால், அவர்கள் சிறுநகரங்களுக்குச் செல்லும்போது சொந்த வங்கி ஏ.டி.எம்.மில் மேலும் 2 முறை கட்டணமின்றி பணம் எடுத்துக்கொள்ளலாம் என்ற விதிவிலக்கை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. எனவே நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

• தற்போது பல வங்கிகள் மொபைல் பாங்கிங் அப்ளிக்கேஷனை வெளியிட்டுள்ளன. நீங்கள் இதுவரை அதை டவுன்லோடு செய்யவில்லை எனில் உடனே டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள். இவ்வாறு டவுன்லோடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சில வங்கிகள் பரிசுகள் அல்லது தள்ளுபடிக் கூப்பன்களைக் கூட வழங்குகின்றன. 

• ஏ.டி.எம். பரிவர்த்தனைக்குத்தான் கட்டணம் விதிக்கப்படுகிறதே என்று அடிக்கடி வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டாம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலான வங்கிக் கிளை பணப் பரிவர்த்தனைக்கும் கட்டணம் உண்டு. 

• ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வைத்துக்கொள்வதும் உங்களுக்கு உதவியாக இருக்கும். அதிலும் உங்கள் வீட்டுக்கு அருகில் ஏ.டி.எம். இருக்கும் வங்கியில் கணக்கு வைத்துக்கொள்வது நல்லது. தற்போது சில வங்கிகள் 'ஜீரோ பாலன்ஸ்' வங்கிக் கணக்கு வசதியை வழங்குகின்றன. எனவே, கணக்கில் 'சும்மா' பணத்தைப் போட்டு வைக்க வேண்டிய அவசியம் இராது. 

• அடிக்கடி ஏ.டி.எம். செல்வதைத் தவிர்க்கும் வகையில் ஒன்று அல்லது ஒரு சில தவணைகள் அதிகத் தொகையை எடுத்து வீட்டில் வைத்துக்கொள்வதும் பலன் தராது. அப்போது, சேமிப்பு வங்கிக் கணக்குக்குக் கிடைக்கும் வட்டித் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை நீங்கள் இழக்க நேரிடலாம். எனவே, சராசரியாக மாதம் எவ்வளவு செலவாகிறது என்று கணக்கிட்டு அதற்கேற்ப பணம் எடுங்கள்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget