பயர்மேன் சினிமா விமர்சனம்

நடிகர் : மம்முட்டி, உன்னி முகுந்தன், சலீம் குமார், சித்திக், பி.ஸ்ரீகுமார்
நடிகை : நைலா உஷா,
இசை : ராகுல்ராஜ்
ஒளிப்பதிவு : சுனோஜ் வேலாயுதன்
கதை : தீபு கருணாகரன், மனோஜ், ரஞ்சித்
டைரக்சன் : தீபு கருணாகரன்


மற்றவர்கள் உயிரை காக்க. தம் உயிரை பணயம் வைக்கும் தீயணைப்பு வீரர்களின் தியாகம் தான் 'ஃபயர்மேன்' படத்தின் கரு.

நகரத்தின் மையப்பகுதியில் எல்.பி.ஜி கியாஸ் டேங்கர் லாரி ஒன்று மதிய நேரத்தில் எதிர்பாராத விதமாக கவிழ்கிறது. தீயணைப்பு வீரர்கள் வந்து அதை சரிசெய்ய முயலும்போது ஒரு போலீஸ்காரரின் அஜாக்கிரதையால், வெளியேறிக்கொண்டிருந்த கியாஸ் பற்றி எரிந்ததில் தீயணைப்பு வீரர்கள் உட்பட பலர் பலியாகின்றனர். இன்னொரு தீயணைப்பு அதிகாரியான மம்முட்டி பொறுப்பேற்று அந்த கியாஸ் டேங்கர் வெடித்து விடாமல் இருக்கவும், மேலும் கொஞ்சம் கொஞ்சமாக நகருக்குள் பரவும் கியாஸினால் மேலும் அபாயம் ஏற்படாமல் தடுக்கவும் உடனடி ஏற்பாடுகளை செய்கிறார்.

வேறு ஒரு டேங்கருக்கு கியாஸை மாற்றும் வாகனம் வர ஐந்து மணி நேரம் ஆகும் என்பதால், அதற்குள் சுற்றி இருக்கும் மக்களை அவர்களது இடத்தை விட்டு காலிபண்ண சொல்கிறார் மம்முட்டி. கியாஸ் பரவும்போது அது அருகில் உள்ள சிறைச்சாலைக்குள்ளும் பரவும் என்பதால் அங்கிருக்கும் கைதிகளை வேறு இடம் மாற்றச்சொல்லும் அமைச்சரின் உத்தரவுப்படி போலீசார் செயல்படுகிறார்கள். ஆனால் நடைபெறும் விஷயங்களின் அடிப்படையில் இந்த விபத்தே ஜெயிலில் இருக்கும் யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக நடத்தப்பட்ட சதிதான் என்பதை உணர்கிறார் மம்முட்டி. அது சதி தானா? மம்முட்டி அந்த சத்தித்திட்டத்தை முறியடித்தாரா? என்பது பரபரப்பான க்ளைமாக்ஸ்..

காதல் காட்சிகள் இல்லை, பாடல்கள் இல்லை, படம் ஆரம்பிச்சதுதான் தெரியுது. படக்கென இடைவேளை விட்டு விடுகிறார்கள்.. திரும்பவும் படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்குள் என்ட் கார்டு போடுகிறார்கள். அந்த அளவுக்கு படம் ஜெட் ஸ்பீடில் பறக்கிறது. இத்தனைக்கும் படத்தின் மொத்த நீளம் இரண்டு மணி நேரம் என்றாலும் திரைக்கதையின் விறுவிறுப்பில் அது எப்படி போனதென்றே தெரியவில்லை.

படத்தின் முக்கிய தூணே மம்முட்டியின் நடிப்பும் அவர் எடுக்கும் ஒவ்வொரு அதிரடி நடவடிக்கையும் தான். காலையில் ரிட்டயர்டு ஆன சக அதிகாரி, மாலையில் தீவிபத்தில் பலியானது கண்டும், இன்னொரு இளம் வீரர் கண்முன்னே பலியாகும்போதும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் அடக்கிக்கொண்டு, அடுத்தகட்ட பணிகளை முடுக்கி விடும்போது நம் கண்முன்னே மம்முட்டி மறைந்து, ஒரு தீயணைப்பு வீரர் தான் தெரிகிறார்.

ஈகோ கொண்ட போலீஸாருடன் வாதத்தில் ஈடுபடுவதும், அமைச்சர் எடுக்கும் தவறான முடிவை தடுக்க முடியாமல் இயலாமையால் தவிப்பதுமாக கலவையான உணர்வை வெளிப்படுத்துகிறார் மம்முட்டி. இந்த விபத்துக்கு காரணமான சூத்திரதாரியை ஜெயிலில் அவர் கண்டுபிடிக்கும் பாணி சபாஷ் சொல்ல வைக்கிறது.

இளம் தீயணைப்பு வீரராக வரும் உன்னி முகுந்தன். ஒருகட்டத்தில் போலீஸார் ஜெயில் கைதிகளை காப்பற்றும் அக்கறையை கூட தங்களிடம் காட்டவில்லை என்பதை உணர்ந்து பணியை விட்டு விலகி சென்றாலும் பிறகு மனது கேட்காமல் மீண்டும் வரும்போது அவரது கடமை உணர்ச்சி பளிச்சிடுகிறது. அதேசமயம் எதிர்பாராமல் அவர் விபத்தில் இறப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இளம் லேடி போலீஸ் கமிஷனராக வரும் நைலா உஷா தனது கேரக்டரில் மிடுக்கு காட்ட முயற்சித்திருக்கிறார். மம்முட்டியுடன் ஆரம்பத்தில் பினங்கினாலும் பின்னர் சூழ்நிலை உணர்ந்து அவருக்கு உதவ முன்வருவது அவர் கேரக்டர் மீது மரியாதையை ஏற்படுத்துகிறது. இவரும் இன்னும் சில நாட்களில் தமிழுக்கு வந்து விடுவார் பாருங்களேன். விபத்தில் சிக்கியவர்களை, எந்த சுயநலமும் இல்லாமல் வலியவந்து காப்பாற்றும் ஒரு சில நடமாடும் மனித தெய்வங்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களில் ஒருவரைத்தான் பிரதிபலித்திருக்கிறார் சமூக சேவகராக வரும் சித்திக்..

இதுதவிர ரிட்டயர்டு ஆன தினத்தன்று வீட்டிற்கு கிளம்புவதற்கு முன், விபத்து பற்றிய செய்தி வந்ததும், உடனே யூனிபார்மை மாட்டி களத்திற்கு சென்று, எதிர்பாராமல் விபத்தில் பலியாகும் ஸ்ரீகுமாரும் கூட, கடமை மிக்க தீயணைப்பு வீரரின் இன்னொரு பிரதிபலிப்புதான். சலீம் குமாரின் கதாபாத்திரம் அவர்மீது இரக்கம் கொள்ள வைத்து, பின்னர் அவரது செயல்பாடுகளை பார்த்து நம்மை அதிர்ச்சியடையவும் வைக்கிறது. குறிப்பாக மனநிலை பிறழ்ந்தவர் போல, சிகரெட் லைட்டரை பற்றவைத்து விடுவதாக அவர் மிரட்டல் வசனம் பேசும் காட்சி ஒன்று போதும். ஆனால் சலீம்குமாரின் மெலிந்த தோற்றத்தை பார்க்கும்போது எப்படி இருந்தவரை சர்க்கரை நோய் எப்படி மாற்றி, உடலை உருக்கிவிட்டது என்கிற பரிதாபமும் ஏற்படுகிறது.

பாடல்களுக்கு வேலை இல்லையென்பதால் பின்னணி இசையில் முழுக்கவனம் செலுத்தியுள்ளார் இசையமைப்பாளர் ராகுல்ராஜ். அதேபோல விபத்து நடந்த இடத்தை நமக்கு படம்பிடித்து காட்டியவிதத்தில் ஒளிப்பதிவாளர் சுனோஜ் வேலாயுதன் நம்மை கவர்கிறார். மதியம் ஆரம்பித்து நள்ளிரவுக்குள் முடியம் கதை தான். அதில் ஒரு விபத்து நடந்தபின் நடக்கும் மீட்பு நடவடிக்கையை நேரில் பார்த்தது போன்ற அனுபவத்தையும், விபத்தின் பின்னணியில் சதி ஒளிந்திருப்பதாக ட்விஸ்ட் வைத்து அதைக்கண்டுபிடிக்க நடத்தும் த்ரில்லிங் ஆபரேஷனையும் காட்டி நம்மை இரண்டுமணி நேரமும் இருக்கை நுனியிலேயே உட்கார வைத்ததில் வெற்றிபெற்று இருக்கிறார் இயக்குனர் தீபு கருணாகரன்.

ஃபயர்மேன் - கொடுத்த காசுக்கு கொஞ்சம் கூட வஞ்சனை செய்யாத படம்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget